ஆஸி அணிக்கெதிரான ரி-20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி !

17.07.2021 10:44:43

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான ரி-20 போட்டியிலும், மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் ரி-20 தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது.

சென்.லூஸியா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, எவீன் லுயிஸ் 79 ஓட்டங்களையும் நிக்கோலஸ் பூரான் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், ஹென்ரிவ் டை 3 விக்கெட்டுகளையும் ஆடம் செம்பா மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்வெப்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 200 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 34 ஓட்டங்களையும் மிட்செல் மார்ஷ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செல்டோன் கொட்ரேல் மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஹெய்டன் வோல்ஷ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக எவீன் லுயிஸ் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடரின் நாயகனாக ஹெய்டன் வோல்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.