வீட்டில் திடீரென மரணமடைந்த தம்பதியினருக்குக் கொரோனா!

05.08.2021 05:07:00

காலி மாவட்டம், நாகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றில் திடீரென உயிரிழந்த தம்பதியினர் கொரோனா வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்துள்ளனர் என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாகொடையைச் சேர்ந்த 73 வயது நபரும், அவரது 72 வயது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் வீட்டில் மரணமடைந்த நிலையில் அவரது சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்தமை தெரியவந்துள்ளது.

அதேபோன்று அவரது மனைவி நேற்று அவரது வீட்டில் மரணமடைந்துள்ள நிலையில், அவரது சடலமும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த இருவரது சடலங்களும் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாகத் தகனம் செய்யப்பட்டுள்ளன.