ஐ.நா கூட்டத்தில் உலகத் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் காணொலி மூலம் உரையாற்ற இந்தியா உட்பட 101 நாடுகள் ஆதரவு!

17.09.2022 10:34:07

இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஐ.நா.பொதுச் சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.செப்டம்பர் 21ம் தேதி அன்று நடைபெறும் உயர்மட்ட ஐ.நா. கூட்டத்தில் உலகத் தலைவர்கள் மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. பொதுச் சபையில் உக்ரைன் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பான ஒரு முன்மொழிவை 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசீலனை செய்தது. போர் காரணமாக ஜெலென்ஸ்கி பொதுச் சபைக் கூட்டங்களில் நேரில் பங்கேற்க முடியாது என்று உக்ரைன் விவகாரங்களுக்கான ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.ஆனால் உக்ரைனால் உருவாக்கப்பட்ட இந்த உத்தேச முன்மொழிவு முடிவின் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ரஷியா அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக, ரஷியாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா புதன்கிழமை கூறியதாவது: "வீடியோ மூலம் ஜெலென்ஸ்கியை பேச அனுமதிப்பதை ரஷியா எதிர்க்கிறது" என்றார். இதனையடுத்து நேற்று ஐ.நா சபை கூட்டத்தில், 'உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும்' தீர்மானத்தை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

193 நாடுகளை கொண்ட சபையில், இந்தியா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகள் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு ஆதரவாக வாக்களித்தன. பெலாரஸ், கியூபா, எரித்திரியா, ரஷியா மற்றும் சிரியா உட்பட ஏழு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன மற்றும் 19 நாடுகள் வாக்களிக்கவில்லை.தீர்மானத்துக்கு ஆதரவாக 101 வாக்குகள் கிடைத்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.