சிங்களமயமாக்கலுக்குத் துணை போகும் தமிழ் எம்.பி-க்கள்.
வடக்கில் எம்.ஏ. சுமந்திரன் போல கிழக்கில் இரா. சாணக்கியன் இங்குள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டி அடக்கி சிங்களமயமாக்கலுக்குத் துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு எல்லைக் கிராமமான வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களைச் சந்திக்கும் நிகழ்வு நேற்று (10-05-2026) கட்சியின் தேசிய அமைப்பாளர் த. சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் பெரும்பான்மை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்கக் கூடாது என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களைச் செய்து கொண்டு வருகின்றனர்.
அந்தக் குடியேற்றங்கள் தென் தமிழ்த் தேசத்தின் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்படுகின்றன.
கூடுதலாக அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் குடியேற்ற வேலைத்திட்டம் மிக மோசமாக இருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாகச் சிங்களமயப்படுத்துவதற்கு மட்டக்களப்பு அதன் இதயமாக இருக்கிறது.
இதனை நேரடியாக மாற்றுவது மிகவும் கடினம் எனவே, கிழக்கு மாகாணத்தின் இரண்டு எல்லைகளை முற்று முழுதாகச் சிங்களமயமாக்குதல் அதாவது அம்பாறையையும் திருகோணமலையையும் சிங்களமயமாக்கி அதில் இருந்து படிப்படியாக முன்னேறி மட்டக்களப்பைத் தனிமைப்படுத்திய பின்னர் மட்டக்களப்பில் கைவைக்கலாம் என்பதே ஒரு திட்டம்.