
பதற்றத்திற்கு பின் அமைதி திரும்புகிறதா?
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 3 பிணைக் கைதிகள் சனிக்கிழமை விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மூன்று பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு இந்த சனிக்கிழமை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
அதன்படி, இரட்டை அமெரிக்க-இஸ்ரேலிய அல்லது ரஷ்ய-இஸ்ரேலிய குடியுரிமை கொண்ட ஐயர் ஹார்ன் (Iair Horn, 46), சாகுய் டெக்கல் சென் (Sagui Dekel Chen, 36), மற்றும் அலெக்ஸாண்டர் (சாஷா) ட்ரூஃபானோவ் (Alexandre (Sasha) Troufanov, 29) ஆகிய இந்த மூவரும் விடுவிக்கப்பட உள்ளனர். இந்த மூவரும் கடந்த ஆண்டு அக்டோபரில் 7ம் திகதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலின் போது kibbutz இருந்து கடத்தப்பட்டனர். இவர்கள் கிட்டத்தட்ட 498 நாட்களாக பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த பிணைக் கைதிகள் விடுவிப்பானது, போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடையும் அபாயத்தை ஏற்படுத்திய சமீபத்திய பதட்டங்களுக்கு பிறகு வருகிறது. இஸ்ரேல் காசாவிற்கு தங்குமிடங்கள், மருத்துவ உதவி, எரிபொருள் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் தடைகள் ஏற்படுத்துவதாக குறிப்பிட்டு ஹமாஸ் பிணைக் கைதிகள் விடுவிப்பதில் தாமதம் ஏற்படலாம் என்று அறிவித்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பணயக் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால் இராணுவ நடவடிக்கையை மீண்டும் தொடங்கப்படும் என்று எச்சரித்தார். இதனை தொடர்ந்து எகிப்து மற்றும் கத்தார் மேற்கொண்ட தீவிர மத்தியஸ்த முயற்சிகள் பிரச்சினைகளைச் சுமூகமாக தீர்த்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஹமாஸ் திட்டமிட்ட விடுதலை நடவடிக்கையைத் தொடரப்போவதாக உறுதி செய்துள்ளது. பதிலுக்கு 369 பாலஸ்தீனிய கைதிகள் மற்றும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்களை விடுவிக்க எதிர்பார்ப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. |