கட்டணம் இல்லாத தரிசனம்

27.01.2025 08:04:04

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் கட்டணம் இல்லாத தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தினத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். குறிப்பாக, பழனி முருகன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு தைப்பூசம் பிப்ரவரி 11ஆம் தேதி வர உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு, பழனி முருகன் கோவிலில் கட்டணம் இல்லாத தரிசனம் அனுமதிக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தைப்பூச தினம், அதற்கு முந்தைய நாள், மற்றும் தைப்பூச தினத்திற்கு அடுத்த நாள் என மூன்று நாட்கள் கட்டணம் இல்லாத தரிசனம் நடைமுறைகளில் இருக்கும் என்றும், இந்த திருவிழாவுக்கு வரும் இரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 

மேலும், பக்தர்களின் வசதிக்காக கட்டணம் இல்லா பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.