இந்தியா ஆறுதல் வெற்றியுடன் தொடரிலிருந்து வெளியேறியது !

09.11.2021 12:30:03

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 42ஆவது லீக் போட்டியில். இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த ஆறுதல் வெற்றியுடன் இந்தியக் கிரிக்கெட் அணி, நடப்பு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

டுபாயில் நேற்று (திங்கட்கிழமை) குழு 2இல் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் நமீபியா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெய்ஸ் 26 ஓட்டங்களையும் பார்ட் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 15.2 ஓவர்கள் நிறைவில், 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 56 ஓட்டங்களையும் கே.எல். ராகுல் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில், ஜென் பிரைன்லின்ங் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா தெரிவுசெய்யப்பட்டார்.