70 ஆண்டுகள் மணி முடி சூடிய மகாராணி

09.09.2022 09:00:00

மணிமுடி

மக்கள் மனதில் இடம் பிடித்து பின்பு ராணியாக 1952-ஆம் ஆண்டு முடிசூட்டிக் கொண்டு ஒரு நாட்டை 70 ஆண்டு காலம் ஒரு பெண்ணால் ஆள முடியும் என்பதை நிரூபித்துகாட்டியவர் தான் ராணி இரண்டாம் எலிசபெத்.

1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிறந்தவர் எலிசபெத் அலெக்சேன்ட்ரா மேரி. அவர் பிறந்தபோது இங்கிலாந்தை அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் ஆண்டு கொண்டிருந்தார்.

இவரது தந்தை பெயர் ஆறாம் ஜார்ஜ். தாய் பெயர் எலிசபெத். இதனால் இவர் இரண்டாம் எலிசபெத் ராணி என அழைக்கப்பட்டு வந்தது.

10 வயதில் பட்டத்து இளவரசி -  எலிசபெத்

அவரது தாத்தா ஐந்தாம் ஜார்ஜ் 1936-ல் மரணமடைந்தபோது மன்னராக மூத்த மகன் எட்டாம் எட்வர்டு அரியணை ஏறினார்.

ஆனால் குறுகிய காலத்திலேயே தன்னுடைய காதலுக்காக மன்னர் பதவியைத் துறந்தார். அதைத் தொடர்ந்து எலிசபெத்தின் தந்தையான ஆல்பர்ட் ஆறாம் ஜார்ஜ் என்ற பெயருடன் மன்னரானதும் 10 வயதில் பட்டத்து இளவரசி ஆனார் எலிசபெத்.

1952 ஆம் ஆண்டில் தந்தை மறைந்ததும் இங்கிலாந்தின் ராணியாக முடிசூடினார் இரண்டாம் எலிசபெத்.

இவர் பிறந்த நேரத்தில், மணிமுடியை ஏற்பது இவருக்கு விதிக்கப்பட்டதாக இருக்கும் என வேறு எவரும் ஊகித்துக் கூட பார்த்திருக்காத ஒன்றாக இருந்தது.

முன்னதாக மகாராணி பிரிட்டன் இளவரசியாக இருந்தபோது செல்வ செழிப்பான வாழ்க்கையை நடத்தினார். அனைத்து வசதிகளும் அரண்மனையிலேயே இருந்தது. ஆசிரியர்கள் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டு கல்வி போதித்தனர்.

ராணி எலிசபெத்தின் கரம் பற்றிய பிலிப்

குதிரை சவாரி செய்ய விண்ட்சர் கிரேட் பூங்காவிற்கு சென்று வந்த எலிசபெத் தனது கணவரான பிலிப்பை முதன் முதலில் அங்கு தான் சந்தித்தார்.

பிலிப் கிரீஸ் மற்றும் டென்மார்க்கின் இளவரசராக இருந்தார். எலிசபெத் தனது 13வது வயதில் காதலை பிலிப்பிடம் வெளிப்படுத்தினார்.

இதையடுத்து இருவரும் காதல் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். அதன்பிறகு ஜூலை 1947ல் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு நவம்பர் 20ல் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் சர்வேதேச நிகழ்வாக இருந்தது. கிரேக்கம் மற்றும் டென்மார்கின் இளவரசராக இருந்த பிலிப்புடன் காதல் கொண்ட நிலையில் தனது பட்டத்தை துறந்து 1947-ல் ராணி எலிசபெத்தின் கரம் பற்றினார் பிலிப்.

இவர்களுக்கு ஒரு வருடம் கழித்து இளவரசர் சார்லஸ் பிறந்தார். அதன்பிறகு ஆன், ஆண்ட்ரூ, எட்வர்டு என்ற மகன்கள் பிறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்ட - ராணி எலிசபெத்

கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் கடந்த சில நாட்களாக ராணி எலிசபெத்தின் உடல்நிலையும் மோசமானது.

ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோர் அரண்மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.

சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்த மகாராணி தனது பதவிக்கால வரலாற்றில் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் இன்றைய போரிஸ் ஜான்சன் வரை 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மகா ராணி இரண்டாம் எலிசபெத்

ராணி இரண்டாம் எலிசபெத்தை எந்த சட்ட திட்டங்களும் கட்டுபடுத்தாது.

ராணி மீது எந்த வழக்கும் பதிய முடியாது.

உலகில் எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் அவர் சென்று வரலாம், அதற்கு கடவுச்சீட்டு தேவையில்லை.

இங்கிலாந்தில் அவர் கார் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.

அவர் போக்குவரத்து விதிகளை மீறினாலும் தண்டிக்க முடியாது. ஆனாலும் இதுவரை எந்த சர்ச்சையிலும் அவர் சிக்கியதில்லை

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை இன்று வரை உயிர்ப்போடு வைத்திருப்பது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கான முன்னோடியாகவும் இருந்துள்ளார்.

மன்னர் ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வந்தவர். குறிப்பாக அரச குடும்பத்திற்கும், அரண்மனைக்கும் தேவையான செலவினங்களை இங்கிலாந்து மக்களின் வரி பணத்திலிருந்து வழங்கும் முறையை 2012- ஆம் ஆண்டு மாற்றினார்.

கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பிரதமர்கள் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அந்த நாட்டிற்கான நிரந்தர அதிபர் ராணி எலிசபெத் தான்.

எந்த நாட்டின் மீது போர் தொடுக்கும் அதிகாரம் இருந்தாலும் இதுவரை போர் தொடுக்க விரும்பியதில்லை.

பிரிட்டனில் இவர் ஆட்சி பொறுப்புக்கு வந்தபின் இதுவரை 13 அமெரிக்க அதிபர்கள் மாறியிருக்கிறார்கள்.

இவ்வாறு உலக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த மிகப் பெரிம் சரித்திர வரலாறு நேற்றுடன் முடிவுரை எழுதிக்கொண்டது.