விசேட அதிரடி படையினர் தயார் நிலையில்

09.08.2022 09:38:27

 

ஆர்ப்பாட்ட பேரணி

கொழும்பு நகரில் இன்று (9ம் திகதி) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு செயற்பாட்டாளர்கள் தயாராகியுள்ளதால், கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பை பாதுகாப்பதற்காக காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் ஆயுதப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு 

அதிபர் மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கலவரத் தடுப்புப் பிரிவு, நீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குழுக்களை விழிப்புடன் வைத்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், கொழும்பை பாதுகாப்பதற்காக பல விசேட காவல்துறை குழுக்கள் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.