அரசாங்கம் செயற்படுத்தக் கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம்!
|
நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அதேபோன்று அரசாங்கம் செய்யாமல் இருக்கின்ற மற்றும் தவறாகச் செய்யும் விடயங்களை சுட்டிக்காட்டத் தவறுவதே இல்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
|
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத்தைத் திறந்துவைக்கு நிகழ்வில் உரையாற்றிய சுமந்திரன், ஜனாதிபதி கூறுவதுபோல் நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்றால், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, இதுபற்றி தெளிவுபடுத்தி காணொளியொன்றை வெளியிட்டிருக்கும் சுமந்திரன், அதில் மேலும் கூறியிருப்பதாவது: ஜனாதிபதி ஆயுதக்கலாசாரப் பின்னணியிலிருந்து வந்தவராவார். அதேபோன்று எமது மக்களும் தமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாவர். ஆகையினால் நாட்டில் மீண்மொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய கருத்தை நாமும் சேர்ந்து ஏற்றுக்கொள்வது நல்லதொரு விடயமாகும். ஆனால் அவ்வாறானதொரு சூழ்நிலை உருவாகவேண்டுமாயின், அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்தில் பகிரப்படவேண்டும் என்று எனது உரையில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினேன். இலங்கைத் தமிழரசுக்கட்சி பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இயங்கிவருகிறது. மறுபுறம் சில கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களுடன் இணைந்து இயங்கவில்லை. மாறாக நாம் எமது தனித்துவத்தைப் பேணியவாறு, எமது மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசாங்கம் செயற்படுத்தக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைக்கிறோம். அதேபோன்று அரசாங்கம் செய்யாமல் இருக்கின்ற மற்றும் தவறாகச் செய்யும் விடயங்களை சுட்டிக்காட்டத் தவறுவதே இல்லை. இந்த விடயத்தையும் நான் ஜனாதிபதியிடம் கூறியிருந்தேன். நாங்கள் ஒவ்வொரு விடயம் எனும் அடிப்படையில் தான் அணுகுகிறோம். நாம் தனித்து இயங்குகிறோம். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேரவில்லை. இருப்பினும் சில விடயங்களில் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டுமெனில், ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவோம் என்றும் நான் அவரிடம் எடுத்துரைத்தேன் என்றார். |