பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற யாழ் யுவதி சுவஸ்திகா !

15.07.2021 10:00:10

பிரான்ஸில் வியத்தகு விஞ்ஞான மருத்துவ விருதினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சுவஸ்திகா இந்திரஜித் பெற்றுள்ளார். பாரிஸில் வசிக்கும் சுவஸ்திகா பாரி சக்லே (Paris-Saclay) பல்கலைக்கழகப் பட்டதாரியாகும். இந்நிலையில் பிரான்ஸில் உயரிய விருதினை பெற்ற இரண்டாவது தமிழ் பெண்ணாக இவர் பெயரிடப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் சுகாதார சங்கம் , பிரான்ஸ் இயற்பியல் சங்கம் என்பன சிமி பிசிக்ஸ் (Chimie-Physique) என்ற அமைப்பும் இணைந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த விஞ்ஞான ஆய்வுக்கான விருதினை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது, சுவஸ்திகா இந்திரஜித்துக்கு கிடைத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் காஇன் நொர்மன்டி (Caen Normandie) பல்கலைக்கழகத்தில் வேதியல் பிரிவில் முனைவர் ஆய்வு நடைபெற்றிருந்தது. இதில் “அயன்களும் இலத்திரன்களும் மோதுவதால் ஏற்படும் கலங்களில் உருவாகும் நேரியல் ஐய்திரோகார்பன் கொத்துகளின் மூலக்கூறு வளர்ச்சி ” என்ற ஆய்வை சுவஸ்திகா மேற்கொண்டிருந்தார்.

அது சிறந்த விஞ்ஞான ஆய்வாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவரின் கண்டுபிடிப்புக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இதில் பல விஞ்ஞான ஆய்வாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சுவஸ்திகா, சுவீடன் நாட்டில் ஸ்டொக்ஹோம் (Stockholm) பல்கலைக்கழகத்தில் உதவி விஞ்ஞானியாக பணி புரிய ஆரம்பித்துள்ளார் என்பது சிறப்பு தகவலாகும். சுவஸ்திகா பிரான்சில் தமிழ்ச்சோலையில் 12 ஆம் ஆண்டு தமிழ்மொழிக் கல்வியை நிறைவு செய்துள்ளதுடன், அவ்வப்போது தான் வாழும் பிரதேசத்தில் உள்ள தமிழ்ச்சோலையில் தமிழ் ஆசியரியராகவும் பணியாற்றியவர்.

அதுமட்டுமல்லாது தொடர்ந்தும் தமிழ்ச்சோலைத்தலைமைப் பணியகத்தின் கீழ் இயங்கிவரும் தமிழ் இணையக்கல்விக்கழகத்தில் தமிழ்மொழியில் மேற்படிப்பை மேற்கொண்டு இளங்கலைத் தமிழியல் பட்டப்படிப்பையும் முடித்து 2018 ல் பட்டம் சூடிக்கொண்டவர். செல்வி சுவஸ்திகா இந்திரஜித், பரதநாட்டிய நடனத்தையும் முறையாக கற்றுக்கொண்டு ஏராளமான நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.