மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,500: அதிமுக

09.03.2021 07:49:06

குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், “தேர்தல் அறிக்கை மற்றும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது உள்ளிட்டவை குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடந்து, செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாகும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு குடும்பங்களுக்குக்கும் ஆண்டுதோறும், 6 சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முன்னதாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மக்கள் நீதி மய்யமும் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது