ஜெனீவாவில் 58 ஆவது கூட்டத்தொடர்

24.02.2025 09:03:32

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும்  முதலாவது அமர்வு இதுவாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் ஜெனீவா சென்றுள்ளனர்.

இதில் பங்கேற்றுள்ள, இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திர சிறப்பு குழு, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஐ.நா மனித உரிமைகள் அமர்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நட்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரத்தியேகமாக சந்தித்து இலங்கை தரப்பு கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51 இன்றின் கீழ் ஒன்று நகல் வரைபையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்க புதிய அரசாங்கமும் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.