மாகாணசபை தேர்தலை நடத்தினால் அரசாங்கம் படுதோல்வியடையும்!
|
கூட்டுறவு சங்க தேர்தல்களில் தோல்வியடைந்துவரும் அரசாங்கம் இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது தெரியும். அதனால் அரசாங்கம் தற்போதைக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு முயற்சிக்கப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். |
|
கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அரசாங்கம் மக்களின் நன்மதிப்பை தற்போது இழந்து வருகிறது. இதற்கு உதாரணம்தான், இடம்பெற்றுவரும் கூட்டுறவு சங்க தேர்தல்களாகும். அண்மையில் இடம்பெற்ற குருணாகல் மாவட்ட கூட்டுறவு சங்க தேர்தல் அனைத்திலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. நாடு பூராகவும் இந்த நிலையே இருந்து வருகிறது. தேர்தல்களுக்கு பயப்படப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்தாலும், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு எந்த தேவையும் இல்லை. ஏனெனில் தற்போதைய நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்தினால், அரசாங்கத்துக்கு தோல்வியல்ல, படுதோல்வியே ஏற்படும் என்பதை அரசாங்கம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. அதனால் தேர்தல் வரைபை அரசாங்கம் சுறுட்டிக்கொண்டிருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் ஆணையை இல்லாமலாக்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் தற்போது ஒருசில நாடகங்களை அரங்கேற்றிக்கொண்டே முன்னுக்கு செல்கிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலத்தில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதாக கர்தினால் ஆண்டகைக்கு ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார். அரசாங்கத்துக்கு ஒருவருடம் கடந்துள்ளபோதும் புதிய அரசியல் யாப்பு அமைப்பது தொடர்பில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் வாக்குறுதி வழங்கி இருந்தது. இந்த வருடம் ஏப்ரல் 22ஆம் திகதிக்கு இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிகழ்வாகும். அப்படியானால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எங்கே? பிரதான சூத்திரதாரியை மறைத்து வைத்திருப்பதாகவும், ஆட்சிக்கு வந்ததுடன் அதனை வெளிப்படுத்துவதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாகும் இவர்கள் அன்று தெரிவித்து வந்தார்கள். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை.கர்தினால் ஆண்டகையையும் அரசாங்கம் ஏமாற்றி இருக்கிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருடம் கடந்துள்ளபோதும் இவர்களினால் நாட்டுக்கு அபிவிருத்தியோ, மறுமலர்ச்சியோ அல்லது வேறு ஏதாவது மாற்றங்களோ இடம்பெற்றுள்ளதா என பார்த்தால், எதுவும் காணக்கூடியதாக இல்லை. அதனால் நாட்டை முன்னோக்கு கொண்டுசெல்ல இந்த அரசாங்கத்துக்கு எந்த சக்தியும் இல்லை. அதற்காக அவர்களிடம் இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்துவதையும் காணக்கூடியதாக இல்லை. மாறாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாடங்களை அரங்கேற்றி வருகிறது. பாராளுமன்ற நாடகம், சபாநாயகர் நாடகம் அரங்கேறியுள்ள நிலையில், அடுத்ததாக தற்போது ஏப்ரல் மாதம் வரும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றுவார்கள். அதனால் தயவு செய்து இந்த நாடகத்தை அரங்கேற்றாமல், வாக்குறுதி அளித்த பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார். |