அணுசக்தி உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு.

19.05.2025 08:37:26

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியை அதிகரிக்க இதுவரை இல்லாத அளவிற்கு தனியார் மயத்திற்கு வழிவிட மத்திய அரசு தயாராகி வருவதாகவும்,  இதற்கென 1962ல் இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில் பழைய சட்டங்களை அகற்றியும், புதிய சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்து புதிய வழியை உருவாக்கி வருகிறது.

காஷ்மீர் பிரிப்பு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து, இந்திய குடியுரிமை சட்ட திருத்தம், சாதிவாரி கணக்கெடுப்பு, முத்தலாக் ரத்து, வக்ப் வாரிய சட்ட திருத்தம், ஒன்ரேங்க் ஒன் பென்ஷன், இவ்வாறு பல சட்டங்கள் வடிவிற்கு வந்துள்ளன. இதன் இன்னொரு புதிய முயற்சியாக அணுசக்தி உற்பத்தியில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

20 ஆயிரம் கோடி நிதி
கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார். இதன்படி இந்திய மதிப்பில்  ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீட்டில் சிறிய அளவிலான அணு உற்பத்தி கூடங்கள் அமைக்கப்படும் எனவும், தனியார் பங்களிப்பும் இதில் இருக்கும் எனவும், மேலும் 2033ம் ஆண்டுக்குள் ஐந்து சிறிய உலைகள் அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

 

தடைகளை நீக்கும்

இது தவிர, இந்தத் துறையில் முதலீட்டை ஈர்ப்பதற்காக பல பெரிய முடிவுகள் எடுக்கப்படும். இதற்காக,சட்டத்தில் உரிய மாற்றம் செய்யப்படும். இந்தத் திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் தடையாக இருக்கும் சட்டத் தடைகளை நீக்கும்  எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

20 ஜிகாவாட்டாக உயரும்

இதுவரை இந்தியாவின் அணுசக்தித் துறை முழுமையாக அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தத் துறையில் அணுசக்தி கழகம் நியூக்ளியர் பவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட், (NPCIL) மற்றும் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்ரேசன் லிமிடெட் (NTPC) போன்ற அரசு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும். நாடு முழுவதும் உள்ள 24 அணு மின் நிலையங்கள் மூலம் இந்தியா தற்போது 8.1 ஜிகாவாட் அணுசக்தி திறன் உற்பத்தி செய்கிறது. மேலும் 2032ம் ஆண்டுக்குள் இதை 20 ஜிகாவாட்டாக அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.

 

20 ஆண்டுகளுக்கு முன்னர்
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு (20 ஆண்டுகளுக்கு) முன்னர் கையெழுத்தான இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை வணிக ரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.