பிள்ளையான் குறித்து ஜனாதிபதி கூறியது அப்பட்டமான பொய்!
|
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறிய கருத்துக்கள் அப்பட்டமான பொய். மகா சூத்திரதாரியை நாட்டுக்கு வெளிப்படுத்துவதாக கூறிய தற்போதைய அரசாங்கத்தின் மற்றுமொரு இழுத்தடிப்பு நாடகம் நீதிமன்ற அறிக்கைகள் ஊடாக அம்பலமாகியுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். |
|
புதிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் மூலமாக இந்தத் தாக்குதலின் மகா சூத்திரதாரியை நாட்டுக்கு வெளிப்படுத்த முடியும் என்றும் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து ஆளும் தரப்பின் முக்கியஸ்தரான ஆனந்த விஜயபாலவும் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது பிள்ளையான் இப்போது சகல உண்மைகளையும் கக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் மூலம் பலருக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். பிள்ளையான் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் கடந்துவிட்ட நிலையில், அவர் இப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பி அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத் தாக்குதல் அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் எந்தவொரு சம்பவத்துடனும் பிள்ளையானுக்குத் தொடர்பு இருப்பதாகவோ அல்லது அவரது பெயரோ குறிப்பிடப்படவில்லை. இது நாட்டு மக்களையும் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றுவதற்காக அநுர குமார திசாநாயக்க கூறிய அப்பட்டமான பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. நாட்டின் முதல் குடிமகனாகவும் முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் ஒருவர் இவ்வாறான கருத்துக்களைக் கூறுவது மிகவும் பாரதூரமான விடயமாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக அரசாங்கம் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகத்தையே அரங்கேற்றுகின்றது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஜனத் டி சில்வா அறிக்கையில தமது கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 19 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் முன்னணியில் இருப்பவர்கள் தற்போதைய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளை மெருகூட்டுவதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர ஆகியோராவார். அப்போதைய புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன வழங்கிய தகவல்களை மேசையில் போட்டுவிட்டு தேநீர் அருந்திக்கொண்டு வாளாவிருந்தவர்களே இந்த ரவி மற்றும் ஷானி. இவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட வேண்டுமென ஜனத் த சில்வா அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறிருக்கையில் இவர்களைக் கொண்டே மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பது என்பது வேடிக்கையான செயலாகும். இவர்கள் இருவரும் பதவியில் இருக்கும் வரை உயிர்த்த ஞாயிறு வின்நிதர்களுக்கு நீதி கிடைக்காது. அப்போதைய கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக இருந்த அருண ஜயசேகரவை பதவியிலிருந்து நீக்குமாறு கத்தோலிக்க திருச்சபை அழுத்தம் கொடுக்கின்றது. ஆனால் விசாரணை அறிக்கைகளில் எங்கும் அருண ஜயசேகரவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அறிக்கையில் பெயர் குறிப்பிடப்படாத அருணவை நீக்கக் கோரும் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையில் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகரவை பதவிகளில் அமர்த்துமாறு பரிந்துரைப்பது ஏன்? இதில் என்ன சமத்துவம் இருக்கிறது? நேர்மையான விசாரணை வேண்டுமென்றால் ரவி மற்றும் ஷானி ஆகியோரே முதலில் நீக்கப்பட வேண்டும். அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது வழங்கிய முக்கிய வாக்குறுதி சூத்திரதாரியைப் பிடிப்பது. 2025 மார்ச் 31 ஆம் திகதி அநுர குமார திசாநாயக்க ஒரு விசேட அறிவிப்பை விடுத்து ஏப்ரல் 21 ஆம் திகதிக்குள் சூத்திரதாரியை வெளிப்படுத்துவோம் என்றார். ஆனால் அன்று பழைய அறிக்கைகளையே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பினார். இப்போது அடுத்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்குத் தவணை சொல்கிறார். இது ஜனாதிபதியின் மற்றுமொரு 'இன்று போய் நாளை வா' எனும் இழுத்தடிப்பு நாடகமாகும். வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரும்போது ஜனாதிபதிக்கு சூத்திரதாரியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாகத் தானும் தனது அமைச்சரவையும் ஒளிந்துகொள்வதற்கு ஒரு இடத்தையே தேட வேண்டியிருக்கும். சுரேஷ் சலே போன்ற நாட்டுக்காகப் பணியாற்றிய அதிகாரிகளைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஜனத் த சில்வா ஜய தல்விஸ் இமாம் கமிட்டி உள்ளிட்ட ஐந்து அறிக்கைகளையும் சட்டமா அதிபருக்கு அனுப்பி உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுங்கள் என்றார். |