கர்நாடகாவுக்கு செக் வைக்கும் விஜய்!
|
காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வருகிறார். காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட எந்த சமரசத்திற்கும் தயாரில்லை என்பதும் தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. கடந்த பல தசாப்தங்களாகவே, காவிரி நீர் விவகாரம் என்பது தமிழ்நாட்டுத் தலைவர்களின் ஆளுமைக்கும், அரசியல் உறுதிக்கும் வைக்கப்பட்ட ஒரு அக்னிப் பரீட்சை. டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரத்தை காக்கும் இந்த விவகாரத்தில், எந்தவொரு சமரசமும் இன்றிப் போராடுவது தமிழக அரசியலின் எழுதப்படாத விதி.
|
|
நேற்று ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் இன்று சட்டசபையில் மேகதாது அணைக்கு எதிராக ஒரு தனித்தீர்மானத்தை விஜய் கொண்டு வருகிறார். மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாக இந்தத் தீர்மானம் ஒலிக்கப் போகிறது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் எடுக்கும் முதல் பெரிய புவிசார் அரசியல் நகர்வு இதுவாகும். தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளைக் காப்பதில் தனது அரசு ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என்பதைத் தனது வாக்காளர்களுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் அவர் இதன் மூலம் மிக அழுத்தமாக உணர்த்தியுள்ளார். ₹7,150 கோடி மதிப்பிலான உரிமைப் போர் மறுபுறம், பெங்களூருவில் உள்ள கர்நாடகாவின் மூத்த காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான டி.கே. சிவகுமார், இந்த ₹7,150 கோடி மதிப்பிலான அணைத் திட்டம் என்பது தமிழ்நாட்டின் தண்ணீரைத் தடுப்பதற்கான ஆயுதம் அல்ல; மாறாக, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பெங்களூரு மாநகர மக்களின் தாகத்தைத் தீர்க்கும் ஒரு அமுதசுரபி. நாங்கள் இந்தத் தண்ணீரில் ஒரு சொட்டைக் கூட விவசாயத்திற்குப் பயன்படுத்தப் போவதில்லை," என்று அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவகுமார், சென்னைக்கு ஒரு சமாதானக் கரத்தையும் நீட்டினார். "பெங்களூரு மாநகரம் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. எங்களால் கிருஷ்ணா நதியிலிருந்து இங்குத் தண்ணீர் கொண்டு வர முடியாது; காவிரி மட்டும்தான் எங்கள் ஒரே நம்பிக்கை. இது முழுக்க முழுக்கக் குடிநீருக்கான திட்டம். சொல்லப்போனால், உபரி நீரைச் சேமித்து வைப்பதன் மூலம் வறட்சி காலங்களில் தமிழ்நாட்டிற்குத்தான் இது பயனுள்ளதாக இருக்கும்." என்றார். கடந்த 2025-ஆம் ஆண்டின் அதித்தீவிர பருவமழையின் போது, சுமார் 400 டி.எம்.சி (TMC) தண்ணீர் வீணாகக் கடலில் கலந்ததை அவர் சுட்டிக் காட்டினார். அந்த நீர் மூலம் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரித்து, பெங்களூருவின் குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்வதில் என்ன தவறு? என்பதுதான் கர்நாடகாவின் வாதம். இதற்காக, திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடக அரசு ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான அனுமதிகளைப் பெற, அம்மாநில முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் ஆகியோரை நேரில் சந்தித்துத் தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய்யுடன் நேரடியாக அமர்ந்து பேசவும் தயாராக இருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார். கர்நாடகா மேகதாதுவில் ஒரு பிரம்மாண்டமான அணையைக் கட்டிவிட்டால், காவிரியின் முழுக்கட்டுப்பாடும் அவர்கள் கைக்குச் சென்றுவிடும். தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி, கர்நாடகா காவிரியின் குறுக்கே எந்தவொரு புதிய கட்டுமானத்தையும் மேற்கொள்வது பன்னெடுங்காலமாகப் பின்பற்றப்படும் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பகிர்வுக் கொள்கைகளுக்கு எதிரானது என்பது தமிழகத்தின் தெளிவான நிலைப்பாடு. இந்த அணை கட்டப்பட்டால், பசுமையாகக் காட்சியளிக்கும் காவிரி டெல்டா, நாளடைவில் வறண்ட பாலைவனமாக மாறிவிடும் என்று தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒருமித்த குரலில் எச்சரிக்கின்றன. இன்றைய தினம் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் முதல்வரால் கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவின் இந்தத் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எவ்விதமான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்றும், தமிழ்நாட்டின் அனுமதியின்றி அங்கே எந்தப் பணியும் தொடங்கக் கூடாது என்றும் இந்தத் தீர்மானம் மிகக் கடுமையாக வலியுறுத்தும் என தெரிகிறது. கர்நாடகாவின் இந்த அணை கட்டும் முயற்சிக்கு கேரளா, புதுவை ஆகிய மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காவிரி நீரை மேற்கண்ட மாநிலங்களும் பயன்படுத்துகின்றன. |