மீள்கட்டுமானத்துக்கு லம்மி ஆதரவு!
|
இலங்கையின் மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லம்மி தெரிவித்துள்ளார். |
|
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லம்மிக்கும் (David Lammy) இடையிலான சந்திப்பு இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளிக்குப் பின்னர் நாடு மீண்டெழுந்து வரும் வேளையில், இலங்கைக்கு வருகை தந்தமைக்காக துணைப் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றிகளைத் தெரிவித்தார். துணைப் பிரதமரின் இந்த விஜயம், இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் மீதான சர்வதேச நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அத்துடன், 'டித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் மீளக் கட்டியெழுப்பும் பணிகள் குறித்து துணைப் பிரதமருக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதற்காகத் தேவையான அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு சுற்றுலாத்துறை, ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதில் அனைத்து நட்பு நாடுகளின் ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும், ஐக்கிய இராச்சியம் இதில் ஒரு தனித்துவமான பங்களிப்பினை வகிக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கைக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதிச் சந்தையில் ஐக்கிய இராச்சியம் வழங்கி வரும் பாரிய பங்களிப்பைப் பாராட்டினார். குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின்போதும், இலங்கையின் ஆடை ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரியினை நீக்கி, வழங்கிய விசேட ஆதரவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை இடையிலான பிணைப்பு மிகவும் விசேடமானது எனக் குறிப்பிட்ட துணைப் பிரதமர் டேவிட் லம்மி, இலங்கைக்கு மிக நெருக்கமான நாடாகச் செயற்படுவதை எப்போதும் உயர்வாகக் கருதுவதாகத் தெரிவித்தார். அத்துடன், இலங்கை தற்போது முன்னெடுத்து வரும் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களுக்காகத் தனது நாடு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் பணிகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான வேலைத்திட்டத்துக்கு ஐக்கிய இராச்சியத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்றும் துணைப் பிரதமர் உறுதியளித்தார். போருக்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் தற்போதைய அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விரிவான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பாராட்டுத் தெரிவித்த அவர், அவற்றுக்கும் ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), துணைப் பிரதமரின் சர்வதேச பிரிவின் தலைவர் டேவிட் மேயர் (David Meyer) உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவினரும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர். |