
கிழக்கு உக்ரைனில் 2 சீனப் போர் வீரர்கள் கைது!
ரஷ்யாவுடனான போர் நடவடிக்கையின் போது கிழக்கு உக்ரைனிய பகுதியிலிருந்து 2 சீனப் போர் வீரர்களை கைது செய்து இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, கிழக்கு உக்ரைனில் நடைபெற்ற கடுமையான சண்டையில் சீனாவைச் சேர்ந்த இரண்டு போர் வீரர்கள் தங்கள் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். |
ஜெலென்ஸ்கி மேலும் கூறுகையில், உக்ரைன் ராணுவம் ஆறு சீன வீரர்களை எதிர் கொண்டதாகவும், அதில் இருவர் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பெய்ஜிங்கிடம் உடனடியாக விளக்கம் கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "ஆக்கிரமிப்பு படைகளில் இரண்டு சீன குடிமக்களை விட அதிகமானோர் இருப்பதாக எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அனைத்து உண்மைகளையும் நாங்கள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுடனான சீனாவின் நெருங்கிய நட்பு மற்றும் உக்ரைன் மீதான மாஸ்கோவின் போர் நடவடிக்கைகளுக்கு பெய்ஜிங் மறைமுகமாக உதவி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புடன் சீனா கைகோர்த்துள்ளதாக ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்வினையை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை. உக்ரைன்-ரஷ்யா போரில் குறிப்பிடத்தக்க வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு போர் வீரர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர். பெரும்பாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான பணத்துக்காகவே அவர்கள் இவ்வாறு செய்கின்றனர். இருப்பினும், இது அந்தந்த நாடுகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், வட கொரியா தனது ஆயிரக்கணக்கான துருப்புக்களை ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக அனுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. |