இலங்கையிடம் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இந்தியா வலியுறுத்தல்

02.01.2021 10:09:36

 

அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்தியா – இலங்கை இடையேயான கூட்டு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய தரப்பில் இருந்து மத்திய மீன் வளத்துறை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். இங்கை தரப்பில் மீன் வளத்துறை அமைச்சின் செயலாளர் ரத்நாயக பங்கேற்றார்.

கடந்த காலங்களில் இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தில் தொடர்ந்து மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை கடைபிடிக்குமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அண்மையில் இலங்கை கடற்படை சிறைபிடித்த 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

மீனவர்களுக்கு போதுமான தூதரகத்தின் உதவியை அளிப்பதற்கு இந்தியாவுக்கு இலங்கை அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இருநாட்டு கடல் எல்லையில் பரஸ்பரம் கடற்படைகளின் கண்காணிப்பை மேற்கொள்வதற்கான திட்டங்கள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது.