மனோ அணியைச் சந்திக்கிறார் ஜனாதிபதி!
|
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உயர்மட்டத் தூதுக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று வியாழக்கிழமை (02) நடைபெறவுள்ளது. |
|
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இந்த சந்திப்புக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில், அதன் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் (பா.உ), வே. இராதாகிருஷ்ணன் (பா.உ) மற்றும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொள்ளவுள்ளனர். இச்சந்திப்பின் போது மலையக மக்கள் எதிர்நோக்கும் மிக அவசரமான வாழ்வாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால நகர்வுகள், தேசிய அரசியலில் மலையக மக்களின் பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள் உள்ளிட்ட விபரங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. மலையக மக்களின் அபிலாஷைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைப்பதற்கான ஒரு முக்கிய களமாக இந்தச் சந்திப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |