இலங்கை கடற்படை அத்துமீறல்... மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம்

03.02.2021 08:12:23

இலங்கை கடற்படையின் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் மீனவர்கள் பிரச்சனையை எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம்சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அதிமுக எம்பி தம்பிதுரையும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக எம்பிக்கள் குரல் எழுப்பியதை அடுத்து, வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்தார். 

அப்போது, மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.