புயல் பாதிப்பிலிருந்து கல்வித்துறையை மீட்க தீவிரம்.
'டித்வா' சூறாவளியால் நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய கூட்டு முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக யுனிசெப் அமைப்பின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான ஆரம்பக் கட்ட மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை எட்டப்பட்டுள்ள சாதகமான முன்னேற்றங்களை இருதரப்பும் இணைந்து மீளாய்வு செய்ததுடன், அனர்த்தத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு ஆதரவுகளை வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
குறிப்பாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களின் இடைவிடாத தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்தல், அனர்த்தத்தால் உளவியல் ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தல் மற்றும் இது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்தும் பிரதமரும் யுனிசெப் பிரதிநிதிகளும் முக்கிய கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த உயர்மட்டச் சந்திப்பில், யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பிரதிநிதி எம்மா பிரிகாம், யுனிசெப் பிரதிநிதி பெகோனா அரேலானோ உள்ளிட்ட யுனிசெப் அமைப்பின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.