மஹிந்தவின் துணிச்சல் அநுரவிடம் இல்லையா?

14.03.2026 15:17:00

போரை முன்னெடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த முடிந்ததென்றால், தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் அதனை ஏன் நடத்த முடியாதுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே போரை முன்னெடுத்தவர். இதன் காரணமாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அவர் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் நிலவின. மக்கள் தன்னை விமர்சித்த போதிலும், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அவர் அன்றைய காலகட்டத்தில் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், இன்று வடக்கு மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்துவது ஏன்? ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்குச் செல்கின்றார், அங்கு மக்களுடன் சுதந்திரமாக நடமாடுகின்றார், புகைப்படங்கள் எடுத்துக்கொள்கின்றார். இது ஆரோக்கியமான விடயம். இதில் எவ்வித தவறும் கிடையாது.

இருப்பினும், இவ்வளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள ஒரு ஜனாதிபதியால் ஏன் தேர்தலை நடத்த முடியாதுள்ளது என்பதே எனது கேள்வியாகும். இந்த வினா மிகவும் நியாயமானது அல்லவா?" - என்றார்.