மக்கள் தீர்மானித்தால் பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார்!

24.01.2026 13:30:36

பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என நாட்டு மக்கள் தீர்மானித்தால், தான் அதிலிருந்து விலகத் தயார் என பிரதமர், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்றுப் பிற்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைக் குறிப்பிட்டார்.

"ஜனாதிபதியை நீக்க முடியவில்லை. குறைந்தபட்சம் பிரதமரையாவது நீக்க முயற்சி செய்தார்கள் தானே. எங்கே அது? நான் இன்று காலை வந்ததும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகங்கொடுக்கவே ஓடிவந்தேன். அது வரும் வரை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொண்டு வரவில்லையா? வீண் வேலை. நாங்கள் தயாராகவே இருந்தோம்."

"நீங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரத் தேவையில்லை. பிரதமர் மாற வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்மானித்தால்.நாங்கள் வீட்டுக்குச் செல்லவும் தயார். நாங்கள் இந்நாட்டு மக்களுக்கே பொறுப்புக்குரியவர்கள். அதற்கமைய நாங்கள் செயற்படுவோம்," எனவும் அவர் தெரிவித்தார்.