பச்சிளம் குழந்தையுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழ்ப்பெண்!

02.05.2022 10:00:50

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்துள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களான மருந்துகள், பால், மாவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வாழ்வாதாரம் தேடி தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 நபர்கள் ராமேஷ்வரத்துக்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் மற்றும் கியூ பிரான்ச் பொலிசார் ஆகியோர் இலங்கையிலிருந்து வந்தவர்களிடம் உரிய விசாரணை நடத்துவதற்காக மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்களை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர். 2 மாத பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியபடியே லதா என்பவர் கலங்கி கூறுகிறார். அவர் கூறுகையில், ஒரு டின் பால் பவுடரின் விலை ரூ.2,000, குழந்தைக்குத் தேவையான தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் கிடையாது. இதே நிலை நீடித்தால், பட்டினியால் சாக வேண்டியதுதான் என வேதனையுடன் கூறியுள்ளார்.