இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பட்டதாரிகள்
இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 349 பட்டதாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம், தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவிக்கையில்,
அதிகரித்த கைதிகள்
கடந்த வருடத்தில் மாத்திரம் 14,547 சிறைக் கைதிகளும், 62,426 சந்தேக நபர்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக அதிகரித்துள்ளது.
உயர்தர,சாதாரண தர மாணவர்களும் சிறையில்
மொத்தமாக 349 பட்டதாரிகளும் உயர்தரத்தில் சித்தியடைந்த 5,395 கைதிகளும் சாதாரண தரத்தில் சித்தியடைந்த 17,616 கைதிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் உள்ள 2.2% பேர் பாடசாலைக்குச் செல்லவில்லை என்று புள்ளிவிபரங்கள் மூலம் அறிய முடிகிறது.
கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட 87 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன், 70 வயதுக்கு மேற்பட்ட சிறைக் கைதிகள் 436 பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.