இலங்கைக்கான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் இலங்கை மற்றும் ரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
அவசியம் ஏற்படும் போதெல்லாம் இலங்கைக்கு ஆதரவளிக்க மொஸ்கோ தயாராக உள்ளது என்றும், தற்போதைய எரிசக்தி நெருக்கடியின் போது ரஷ்ய எண்ணெயை விரைவாக வழங்குவதாகவும், இலங்கையில் புதிய வாய்ப்புகளை ஆராயுமாறு மொஸ்கோ முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும், மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதாகவும் ரஷ்யாவின் பிரதிதி வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.
அத்துடன், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் மோதலில் உயிர் இழந்த இலங்கை போர் வீரர்களுக்கு இழப்பீடு வழங்க மொஸ்கோ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், அழுத்தமான எரிசக்தி தேவைகள் நிலவும் இக்காலத்தில் தனது பழைய நண்பரின் ஆதரவை இலங்கை பெரிதும் மதிக்கிறது என்று இதன்போது வலியுறுத்திய அமைச்சர் விஜித்த ஹேரத் ரஷ்யாவின் உதவி மனப்பான்மையை வரவேற்றார்.
ஏறக்குறைய 70 ஆண்டுகளாக நீடித்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த இதுவே சிறந்த நேரம் என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மேலும் நீண்டகால வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வலுப்படுத்தும் வகையில், எரிசக்தி, முதலீடு, சுற்றுலா மற்றும் தூதரகத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் நோக்கத்தை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.