அமைதி காக்கும் ஐ.நா படையினருக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசி – ஜெய்சங்கர் தெரிவிப்பு!

18.02.2021 10:25:10

ஐ.நா அமைதி காக்கும் படையினருக்கு 2 இலட்சம் கொரோனா தடுப்பூசியை பரிசாக வழங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்துள்ளார்.

ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் காணொலி மூலம் உரையாற்றிய அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கொரோனா போன்ற கடினமான சூழ்நிலைகளில் செயல்படும் ஐ.நா அமைதி காக்கும் படையினரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசிகளைப் பரிசாக வழங்க விரும்புவதாக தெரிவித்தார்.

மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் 49 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் உலகின் மருந்தகமான இந்தியா முன்னிலையில் உள்ளதாகவும் ஜெய்சங்கர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.