ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.5 இராணுவத்தினர் : பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவுத்திட்டம் குறித்து எரான் கூறியது உண்மையா ?

08.02.2024 13:22:45

2024 வரவு செலவுத்திட்ட விவாதங்களின்போது, பாதுகாப்பு அமைச்சிற்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மூன்று கூற்றுகளை முன்வைத்துள்ளார்.

 

அவை: (1) பாதுகாப்பு அமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடு அதிகம், 2022 இல் இது மொத்த வரவு செலவுத் திட்டத்தின் 7%. (2) அதில் 60% சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது (3) பிரஜைகளுக்கு அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தைக் கொண்ட (முதன்மையான 10) உலக நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் கூற்றைச் சரிபார்க்க, 2023 வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகள் மற்றும் உலக வங்கியின் தரவை FactCheck.lk ஆராய்ந்தது.

கூற்று 1: 2022 மொத்த செலவினத்தில் பாதுகாப்பு அமைச்சிற்கான அரச செலவினம் 7.97 சதவீதமாக உள்ளது. 2023க்கான ஒதுக்கீடு மொத்த வரவு செலவுத்திட்டத்தின் 7 சதவீதமாக உள்ளது (அட்டவணை 1).

கூற்று 2: சம்பளங்கள் மற்றும் ஊதியங்கள், மேலதிகக் கொடுப்பனவு, கொடுப்பனவுகள் உட்பட தனிப்பட்ட ஊதியங்களுக்கான செலவினம் 2022 ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சின் மொத்த செலவினத்தில் 69.8 சதவீதமாகக் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு 62.9 சதவீதமாக உள்ளது (அட்டவணை 1).

பாராளுமன்ற உறுப்பினர் 2022 ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2023 இன் செலவினப் பெறுமதிகளைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டுக்கான செலவினம் இன்னும் அதிகமாக உள்ளது. இது அவரின் செலவினம் தொடர்பான ஒட்டுமொத்த வாதத்திற்கும் வலுச்சேர்க்கிறது.

கூற்று 3: ‘இராணுவத்தினர்’ என்ற பேச்சு வழக்கிலான பதத்தை ‘ஆயுதப்படை வீரர்கள்’ என FactCheck.lk விளங்கிக் கொள்கிறது. ஆயுதம் தாங்கிய படையினர் தொடர்பில் கிடைக்கும் உலகளாவிய தரவான உலக வங்கியின் தரவு இறுதியாக 2020 ஆம் ஆண்டுக்கே உள்ளது. அந்தத் தரவிலிருந்து பெறப்பட்ட கணக்கீடுகளின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒவ்வொரு 100 பிரஜைகளுக்கும் 1.45 ஆயுதம் தாங்கிய படையினர் உள்ளனர், இது உலகளவில் 9 ஆவது இடம் ஆகும் (அட்டவணை 2).

பாதுகாப்பு அமைச்சிற்கு வரவு செலவுத்திட்டத்தில் அதிக சதவீதம் செலவிடப்பட்டுள்ளது (2) அந்த செலவினத்தில் அதிக சதவீதம் சம்பளங்கள் மற்றும் ஊதியங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது (3) இலங்கையின் ஒவ்வொரு பிரஜைக்குமான ஆயுதம் தாங்கிய படையினரின் விகிதம் உலகின் முதன்மையான 10 இடங்களில் உள்ளது என்ற பாராளுமன்ற உறுப்பினரின் மூன்று கூற்றைகளையும் தரவு ஆதரக்கிறது.

எனவே நாங்கள் அவரது கூற்றை சரியானது என வகைப்படுத்துகிறோம்.