ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கடை பிரதான நீதிவான் நீதிமன்றத்திற்கு இன்று(31) அழைத்துச் செல்லப்பட்ட போது, அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு வருகைதந்தார்.
பல மணி நேர விசாரணையை தொடர்ந்து, நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் அவரைக் கைது செய்து, பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே அவரை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு வெளியே, ஐந்து நபர்கள் தேசிய லொத்தர் சபையில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் முன்னாள் அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களுடன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டார்.
விசாரணையாளர்களின் கூற்றுப்படி, கருணாநாயக்க இதற்கு முன்னர் நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் அந்தச் சமயங்களில் அவர் ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.
விசாரணை தொடர்பாக, இரண்டு நாட்களுக்கு முன்னர் பத்தரமுல்லவில் உள்ள ராஜமல்வத்த வீதியில் அமைந்துள்ள கருணநாயக்கவின் இல்லத்திற்கும் விசாரணையாளர்கள் சென்றிருந்தனர். இருப்பினும், அந்தப் பயணத்தின்போது அவர் வீட்டில் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.