இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விரட்டப்படும் மக்கள்!

27.12.2025 15:02:24

இயற்கை அனர்த்தங்களால் கண்டி மாவட்டத்தில் தற்போதும் சுமார் 6,000 க்கும் மேற்பட்டோர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்காலிக இருப்பிடங்கள் கூட அமைத்துக் கொடுக்கப்படாத நிலையில், அவர்கள் குறித்த இடைத்தங்கல் முகாம்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.

அதன்படி கண்டி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 55,804 குடும்பங்கள் உள்ள போதிலும், வாக்குறுதியளிக்கப்பட்ட 25,000 ரூபாய் கொடுப்பனவு 32,170 குடும்பங்களுக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.

இன்னும் 23,000 குடும்பங்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சமையலறை உபகரணங்களைப் பெறுவதற்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50,000 ரூபாய் மற்றும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்களுக்காக வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 25,000 ரூபாய் இதுவரை கண்டி மாவட்டத்தின் எந்தவொரு குடும்பத்துக்கும் கிடைக்கவில்லை.

அது மாத்திரமின்றி உயிரிழப்பொன்றுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளும் மிகக் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

குறைந்தபட்சம் தற்காலிகமாகத் தங்குவதற்கு இந்த மக்களுக்கு கூடாரங்களையாவது வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.