புதிதாக 12,143 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி !
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம், இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,92,746 உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 12,143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 103 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,55,550 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,00,625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,395 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,36,571 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று வரை 79,67,647 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.