ஈரானிய கப்பல்களுக்கு இராஜதந்திர அழைப்பு விடுக்கப்படவில்லை!

25.03.2026 09:02:00

இலங்கைக்கு வருகைத் தருமாறு ஈரானிய கப்பலுக்கு இராஜதந்திர மட்டத்தில் எவ்விதமான உத்தியோகபூர்வ அழைப்பும் விடுக்கவில்லை. இலங்கைக்கான ஈரானிய தூதுவர் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தயாரில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட ஈரானிய கப்பல்களை இலங்கைக்கு வருமாறு இலங்கை அழைப்பு விடுத்ததாக இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் குறிப்பிட்ட விடயம் மற்றும், ஈரானிய தூதுவர் கொழும்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துக்கொண்டமை குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் தொடர்பில் ஈரானிய தூதுவர் வெளியிட்ட கருத்துக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய மோதல் நிலைமைக்கு மத்தியில் இலங்கை நடுநிலையான வெளிவிவகார கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறது.

அரசாங்கம் என்ற அடிப்படையில் நடுநிலையான வெளிவிவகார கொள்கையை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை நிபந்தனையற்ற வகையில் முன்னெடுப்போம்.

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு தயாரில்லை. அவ்வாறு குறிப்பிடுவது தற்போதைய நிலையில் பொருத்தமானதாக இருக்காது என்று நினைக்கிறேன். அவசியமாயின் வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

இந்தியாவில் விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட ஈரானிய கப்பல்களுக்கு இலங்கை இராஜதந்திர மட்டத்தில் உத்தியோகபூர்வமான அழைப்பு விடுக்கவில்லை. பிறிதொரு நாட்டில் இடம்பெற்ற நிகழ்வின் போது இராஜதந்திர மட்டத்தில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க முடியாது.

விசாகப்பட்டிணம் நிகழ்வில் கலந்துக்கொண்ட இலங்கை கடற்படைத் தளபதி ஈரானிய கப்பலின் தளபதிக்கு சிநேகபூர்வமான அழைப்பை விடுத்துள்ளார்.அதனை உத்தியோகபூர்வமான அழைப்பு என்று கருத முடியாது என்றார்.