ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் ஆதிவாசிகளின் கோரிக்கை !

05.12.2023 08:00:00

மட்டக்களப்பு - வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்துள்ளார்.

வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட காலமாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.

 

குறித்த கிராமத்தில் உள்ள பாடசாலைகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

 

மேலும், கிராமத்திற்கான பாதைகள் கடும் மோசமான நிலையில் உள்ளதோடு, வைத்தியசாலையில் உதவியாளர்கள் பற்றாக்குறையும் நிலவுகின்றது.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்த்து தருமாறு ஆளுநரிடம் ஆதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

ஆதிவாசிகளின் கோரிக்கையின் பிரகாரம் 24 மணித்தியாலத்தில் மாகாண கல்வி அமைச்சின் ஊடாக 02 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், பாதை புனரமைப்பதற்கான நடவடிக்கையும், வைத்திய சாலைக்கு உதவியாளர் நியமிப்பதற்கும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநரால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.