ஜெனிவா விடயங்கள் குறித்து கேட்டறியவுள்ள சுமந்திரன்!

16.02.2025 14:08:42

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கை எதிர்வரும் செவ்வாயன்று (18) சந்திக்கவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடவுள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கின் அழைப்பின்பேரில் எதிர்வரும் செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள், தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.

அதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் மேலும் ஒருவருடகாலத்துக்கு நீடிக்கப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில் அத்தீர்மானத்தின் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அளிக்கப்பட்ட ஆணையின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் கடந்தகால மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் (இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்) தற்போதைய நிலைவரம் மற்றும் அதனை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் முழுமையாக நிறைவுசெய்வதற்கான சாத்தியப்பாடு என்பன பற்றி உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்கிடம் சுமந்திரன் கேட்டறியவுள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்படும்.