யாழில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவன் பிணையில் விடுதலை

07.02.2024 15:10:07

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

 

நீதிமன்றில் முற்படுத்தல் 

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை காவல்துறையினர் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

 

அதன்போது, இந்த மாணவன் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது.

இந்நிலையில், மாணவனை கைது செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர்  இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

கண்காணிக்க உத்தரவு

அதன்படி, வழக்கை விசாரித்த நீதவான் கைது செய்யப்பட்ட மாணவனை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

அதேவேளை, பல்கலைக்கழக மாணவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாணவனை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பாது தொடர்ச்சியாக கண்காணிக்கவும் உளவள ஆலோசனைக்கும் சமூக சீர்திருத்த நன்னடத்தை பிரிவுக்கு அனுப்பவும் மல்லாகம் நீதவான் எம்.கே.முகமட் கில்மி உத்தரவிட்டுள்ளார்.