41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை

24.07.2024 08:00:00

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜீலை(Black July) கலவரத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 41 வருடங்கள் கடந்தும் மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் வசந்த முதலிகே (Wasantha Mudalige) தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் அரசியல் வாதிகள் இழுத்தடிக்கின்றனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் உள்ள இந்த வளங்கள் விற்கப்படுகின்றன. மக்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

 

இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் எந்தவித கரிசனையும் கொள்வதில்லை. மாறாக இவர்கள் மக்களை துன்பத்துக்கு ஆளாக்குவதிலும் எமது நாட்டின் வளங்களை அந்நிய சக்திகளுக்கு விற்பனை செய்வதிலே முனைப்பு காட்டி வருகின்றனர். நாங்கள் மக்களுக்காகவே போராடுகின்றோம் மக்கள் நலன் சார்ந்தே நாங்கள் செயற்படுகின்றோம்.

 

1983 ஆம் ஆண்டு கறுப்பு உடை இனக்கலவரம் கொழும்பில் இடம் பெற்ற பொழுது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 41 வருடங்கள் கடந்துள்ளன.

மக்களுக்கான தீர்வு இந்த அரசாங்கத்தினால் சரி இந்த சிங்கள அரசியல்வாதிகளினாலோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் ஒடுக்கி ஆளப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நாட்டின் பிரச்சினை இனங்களுக்கு இடையிலான சமரசங்கள் தீர்த்து வைக்கப்படவில்லை. மாறாக இனம், மதம் மொழி என்ற பாகுபாடுகளை மக்களுக்குள் திணித்து அதன் மூலம் அரசியல் இலாபத்தையே இந்த அரசியல்வாதிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

இனங்களைப் பிரித்து மதங்களைப் பிரித்து அதனூடாக குளிர் காய்ந்த அரசியல்வாதிகள் தங்கள் பொக்கட்டுகளை நிரப்பவே இந்த நாடாளுமன்றத்தை அலங்கரித்தனர்.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் பல வருடங்களாக இவர்கள் இழுத்தடிப்பு செய்தனர்.” என வசந்த முதலிகே தெரிவித்தார்.