கொடுமைகள் வெளிவருவதைத் தடுக்கவே ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றனர் – ரவிகரன்

29.11.2021 06:21:20

வடகிழக்குத் தமிழர் தாயகப்பகுதிகளில் இடம்பெறும் கொடுமைகள் வெளிவருவதைத் தடுக்கவே, ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு தாக்கப்படுகின்றார்கள் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

எனவே வடகிழக்குத் தமிழர்களின் ஒரே நம்பிக்கையான ஊடகத்துறையை பாதுகாக்க நீதித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளரும், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்டமையைக் கண்டித்து 28.11.2021 இன்று முல்லைத்தீவு நாகரில் இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

தற்போது வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள, தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு நம்பிக்கை ஊடகத்துறை மாத்திரம்தான். தமிழர்தாயகப் பகுதிகளில் இடம்பெறும் கொடுமைகளை உடனடியாக வெளிக்கொணர்வது எமது தமிழ் ஊடகவியலாளர்களாவர். 

தமிழர் தாயகப் பகுதிகளில் இடம்பெறும் கொடுமைகள் வெளிக்கொணர்வதைத் தடுக்கவே, இவ்வாறு திட்டமிட்டு ஊடகங்களை அடக்கியொடுக்குகின்ற செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையிலேயே ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனும் இராணுவத்தினால் தாக்கப்பட்டார். 

குறிப்பாக ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்தின் தாக்கப்பட்ட தினத்தன்று, ஊடகவியலாளர் தாக்கப்படுகின்றார் என பொதுமக்களால் எனக்கு வழங்கப்பட்ட தகவலுக்கேற்ப உடனடியாக முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றிருந்தேன். 

குறித்த ஊடகவியலாளருக்கு நான்கு இராணுவத்தினர் சேர்ந்து தாக்குதல்நடாத்தியிருக்கின்றார்கள். பச்சைமட்டையில் முட்கம்பி சுற்றி தாக்கியிருக்கின்றனர். 

சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் இயங்குகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கே இந்ந நிலைமை எனில், பொதுமக்களுக்கு என்ன நிலை? என்பதைச் சற்றுச்சிந்திக்கவேண்டும். 

தமிழ்மக்களின் நம்பிக்கையாக இருக்கின்ற ஊடகத்துறையை தயவுசெய்து அடக்கி ஒடுக்கவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வதுடன், இதற்கு முறையான நீதிவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன். 

இந்த விடயத்திலே நீதித்துறை முறையாகச் செயற்பட்டு ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினையும் சுயாதீனத் தன்மையையும் பாதுகாத்து, அதன்மூலம் எமது தமிழ் மக்களின் நம்பிக்கையையும் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.