ஆப்கன் கால்பந்து வீராங்கனைகள் குடும்பத்தோடு பாகிஸ்தானில் தஞ்சம்

15.09.2021 15:52:39

தலிபான் பயங்கரவாதிகளுக்கு அஞ்சி ஆப்கன் கால்பந்து அணியைச் சேர்ந்த 32 வீராங்கனைகள் பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்தனர். இவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடனடியாக விசா வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். கடந்த முறை ஆட்சியைப் போல் இல்லாமல் இந்த முறை பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்கு செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தலிபான்கள் தங்கள் நிலைப்பாட்டிலிருந்து திடீரென மாறி, பெண்கள் வேலைக்கு செல்லவும், ஆடவர்களுடன் சேர்ந்து கல்வி பயிலவும் தடை விதித்தனர். குறிப்பாக, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். இதனால், மகளிர் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் பெண்கள் பங்கேற்கக் கூடாது என்று தடை விதித்த தலிபான்கள், ஆண்கள் பங்கேற்கத் தடையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் 26ம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கன் மக்கள் 170 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பின் நிராதரவாக இருந்த கால்பந்து வீராங்கனைகள் 32 பேர், எங்கு செல்வது? எனத் தெரியாமல் தவித்தனர். அதுமட்டுமல்லாமல் விளையாட்டில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்ததால், கால்பந்து வீராங்கனைகளுக்கு பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டது.

இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த அமைதிக்கான கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் ஆப்கனை சேர்ந்த 32 கால்பந்து வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பாகிஸ்தான் அரசின் உதவியுடன் அந்நாட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.

ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. தற்போது பெஷாவரில் பாகிஸ்தான் கால்பந்து தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ள கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் அவர்களின் குடும்பத்தாரும் லாகூரில் தங்க முடிவு செய்துள்ளனர்.