கடன் பொறியில் இருந்து இலங்கையை காப்பாற்றியது நாம் தான் - மார்தட்டும் சீனா

30.11.2021 15:55:26

மேற்குலக கடன் பொறியில் இருந்து இலங்கையை சீனா காப்பாற்றியதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள சர்வதேச கடன்களில் சீனாவிடம் 10 வீதமான கடனையே பெற்றுள்ளது. அது 3 ஆயிரத்து 388.2 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கியை மேற்கோள்காட்டி சீனத் தூதரகம் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விட தயாராகிய நேரத்தில் சீனா உதவுவதற்காக முன்வந்து, இலங்கையை கடன் பொறியில் இருந்து காப்பாற்றியது எனவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச பிணை முறிப் பத்திரங்ளுக்கு செலுத்த டொலர் இல்லாத காரணத்தினாலேயே இலங்கை கடந்த 2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியது.

இதனை விடுத்து, சீனாவின் எக்சிம் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக இலங்கை அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கவில்லை எனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் நோக்கினால், இலங்கை சிக்கவிருந்த சர்வதேச கடன் பொறியில் இருந்து சீன அரசாங்கம் காப்பாற்றியுள்ளது.