ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம்

03.12.2021 10:12:16

 

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் குறித்து எவரும் அச்சப்பட வேண்டாம். ஆனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஒமிக்ரோன் பாதிப்பு காணப்படுவதாக சிலர் வதந்திகளை பரப்பி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே தமிழக சுகாதார துறை அமைச்சர், ஒமிக்ரோன் வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாமென மக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் தொற்று தமிழகத்தில் வராமல் தடுக்க முழு முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களிலும், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருக்கு மரபியல் ரீதியிலான சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளோம் என சுகாதார துறை அமைச்சர் மேலும் கூறினார்.