பேரறிவாளன் விடுதலைநாள் கருப்புநாள் என கூறும் பெண்

20.05.2022 11:07:48

பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுவதை பார்க்கும்போது ரணவேதனையாக வலிக்கிறது என பெண் காவல் அதிகாரி அனுசியா கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக கடந்த 1991-ம் ஆண்டு மே 21ம் திகதி ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது குண்டுவெடிப்பில் பலியானார். இதில் பொலிஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நாட்டை உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளாக நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவத்தின்போது ராஜீவ்காந்தி அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய காஞ்சீபுரம் மகளிர் பொலிஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அனுசியா டெய்சி எர்னஸ்டும் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து அனுசியா கூறுகையில், இந்த படுகொலை சம்பவத்தில் 9 பொலிசார் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். என்னுடன் சேர்த்து 45 பேர் காயம் அடைந்தனர். என் உடலை சிதைத்த குண்டின் ரவைகளை அகற்றும்போது நான் பட்ட வேதனை சொல்லி மாளாது.

காயத்தின் சுவடுகளுடன், சொல்லமுடியாத வேதனையுடனும் காலத்தை கழித்து கொண்டிருக்கிறோம். இந்த படுகொலையில் தனு, சிவராசன், நளினி, சுபா ஆகிய குற்றவாளிகளை கண்ணால் கண்ட சாட்சி நான்தான்.

எனது மார்பில் 5 வெடிகுண்டு சிதறல், கண் பாதிப்பு ஏற்பட்டதோடு, இரண்டு விரல்கள் பறிபோயின. இதனால் வழக்கமாக ஒரு மனிதன் செய்யக் கூடிய எந்த வேலையையும் என்னால் செய்ய முடியாது. நான் பிறப்பால் எந்தவித குறைபாடும் இல்லாமல்தான் பிறந்தேன். தற்போது பாத்திரத்தில் வெந்நீர்கூட தூக்க முடியாமல் தவிக்கிறேன்.

காலம் முழுக்க இந்த வேதனைகளோடுதான் நான் வாழவேண்டும் இந்தநிலையில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டது போல அவரை வாழ்த்துகிறார்கள்.

சுதந்திர போராட்ட தியாகி போல கொண்டாடுகிறார்கள். ஒரு நாட்டின் தலைவரை கொன்ற குற்றவாளியை இந்த சமூகம் தலையில் தூக்கி கொண்டாடுவதை பார்க்கும்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ரணவேதனையாக வலிக்கிறது.

பேரறிவாளன் இத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டார், பாவம் என்று பேசுபவர்கள், என்னை போன்றோர் நடைபிணமாய் வாழ்வதை நினைத்து பார்க்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.