இலங்கையர்கள் மீது சீனா அதீத பற்று

29.12.2022 19:34:24

 

இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல, இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இலங்கைக்கான சீனப் பிரதித் தூதுவர் ஹு வெய் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்தடை

“இலங்கையில் மின்தடை பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றது. இதனை என்னால் உணரக்கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையில் நடைபெறுகின்ற விடயங்களை நாம் பீஜிங்குக்கு கொண்டு செல்வோம். சீன அரசாங்கம் இதற்கு ஏதாவது வழி செய்யும்.

 

இலங்கை முழுவதற்கும் 10000 மெற்றிக் தொன் அரிசி மாணவர்களுக்கு சீனாவால் அன்பளிப்பாக வழங்கப்படும்.9000 லீற்றர் எரிபொருள் விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

மருந்துப்பொருட்கள், பாடசாலை சீருடைகள் என்பனவும் சீன அரசாங்கத்தாலும் சீன மக்களாலும் வழங்கப்படுகிறது.

இரண்டு நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல மக்களுக்கு இடையிலானது. ஏதாவது செய்யவும் உங்களுக்கு உதவவும் விரும்புகிறோம். கலாசாரம் மதம் என்பதைத் தாண்டி இது நட்பு ரீதியான விடயம்” - என்றார்.