ரஷ்யாவுடன் போரின் போது மற்றொரு நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்!

03.07.2022 10:51:45

 

உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 130-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ குற்றச்சாட்டியுள்ளார்.

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலை பெலாரஸ் ராணுவம் வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் நடுவானில் இடைமறித்து அழித்ததாக அதிபர் அலெக்சாண்டர் கூறியுள்ளார். உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

ஏனெனில் பெலாரஸ் அதன் பொருளாதார மற்றும் இராணுவ தேவைகளுக்காக ரஷ்யாவை பெரிதும் சார்ந்துள்ளது.

கடந்த வாரம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோ, வரும் மாதங்களில் பெலாரஸுக்கு இஸ்கண்டர்-எம் ஏவுகணைகளை வழங்குவதாக அறிவித்தார். இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.