ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவு வழங்கத் தயார்!

25.09.2024 08:42:48

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கும், தேர்தல் முறையை மாற்றுவதற்கும் தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது பூரண ஆதரவை வழங்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

   

1994ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அனைத்து ஜனாதிபதிகளும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக கூறிய போதிலும், எவரும் அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான சிறந்த தருணம் இதுவாகும்.

எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை இருந்தால் தாமதிக்க வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.