அரசு கவிழாது- எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரசாரம்!

04.06.2026 15:39:22

தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், ஆட்சி கவிழப்போகின்றது என்றும் எதிரணிகள் திட்டமிட்ட பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

தற்போதைய அரசு மிகவும் ஸ்திரமான நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என்றும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடந்தது போன்று தற்போதைய அரசும் கவிழும் என்றும் எதிரணி உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வரும் கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது:-

"கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் என எதிரணிகள் முதலில் கூறின. அது நடக்காமல் போனதும், பின்னர் மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடையும் எனப் பிரசாரம் செய்தன. இவ்வாறு அடுத்தடுத்து மாதங்களைக் குறிப்பிட்டுக்கொண்டு எதிரணி உறுப்பினர்கள் போலி அரசியல் நடத்தி வருகின்றனர்.

தமக்கு எஞ்சியுள்ள கட்சியின் ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், தங்களின் அரசியல் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் மட்டுமே நாடு வீழும், அரசு கவிழும் என்றெல்லாம் கதைகளை சோடித்துக் கூறி வருகின்றனர்.

எதிரணியினரால் 'திருடர்களைப் பிடிப்போம், ஊழல்களை ஒழிப்போம், மக்களுக்குப் பொருளாதார நிவாரணங்களை வழங்குவோம்' என்று மேடைகளில் கூற முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். அதனால்தான், பொருளாதார வீழ்ச்சி பற்றிப் பேசி, மாதங்களைக் கணக்குக் காட்டி நாள்களைக் கடத்தி வருகின்றனர்.

இதுதான் அவர்களின் தற்போதைய அரசியல் பாணி. அதற்கு நாம் வழிவிடுவோம், அது பற்றி நாம் எவ்விதத்திலும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை." - என்றார்.