பசிலின் கட்டுப்பாட்டில் அரசாங்கம் !

22.05.2022 09:36:13

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிலேயே அரசாங்கம் முக்கிய தீர்மானங்களை முன்னெடுக்கிறது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் பொருளாதார நெருக்கடியும், அரசியல் நெருக்கடியும் தீவிரமடைவதற்கு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொறுப்புக்கூற வேண்டும்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்களின் காரணமாக அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்தது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மக்களாணைக்கு முரணாக செயற்பட்ட கூட்டணியில் இருந்து 11 அரசியல் கட்சிகளும் வெளியேறி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்பட வேண்டும் என்பதால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு 19ஆவது திருத்தம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், 21ஆவது திருத்தம் விரைவாக செயற்படுத்தப்பட வேண்டும் என்ற பொது கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளோம்.

இரட்டை குடியுரிமையுடையவர் அரசியலில் செல்வாக்கு செலுத்த அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள வரப்பிரசாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பது எமது பிரதான கோரிக்கையாக உள்ளதுடன், மக்களின் பிரதான எதிர்பார்ப்பாகவும் உள்ளது", என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பசிலின் தீர்மானங்களுக்கு அமையவே புதிய அரசாங்கம் செயற்படுகிறது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தன்னிச்சையான தீர்மானங்களுக்கு பசில் ராஜபக்ச முட்டுக்கட்டையாக இருக்கிறார் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.