மீண்டும் பசிலை களத்தில் இறக்க துடிக்கும்..

25.07.2022 10:53:07

மீண்டும் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றம் வருமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிகளவான உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அவரது வெற்றிடத்திற்காக மீண்டும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் பெரும் எண்ணிக்கையான மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இன்று இறுதி தீர்மானம்  

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தம்மிக்க பெரேரா விலகுவாரா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று (25) வெளியாகும் என எதிர்பார்கக்ப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

முன்மொழியப்பட்ட மூவரின் பெயர்கள்

தம்மிக பெரேரா பதவி விலகினால் அவரது வெற்றிடத்திற்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேணுகா பெரேரா, வில்லி கமகே மற்றும் அமரசிங்க ஆகியோரின் பெயர்களே முன்மொழியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிற்கு அந்த பதவியை வழங்குமாறு அதிகளவானவர்கள் கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 9 ஆம் திகதி பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.