
ரஷ்யாவும் உக்ரேனும் உடனடிப் பேச்சுவார்த்தை.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர், ரஷ்யாவும் உக்ரேனும் போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை “உடனடியாக” தொடங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
திங்களன்று (19) நடந்த தொலைபேசி உரையாடலானது “மிகவும் சிறப்பாக” நடந்ததாக விவரித்த ட்ரம்ப், இரு தரப்பினருக்கும் இடையே அமைதிக்கான நிபந்தனைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால், போர் நிறுத்த செயல்முறைக்கு மொஸ்கோ நேரம் எடுக்கும் என்றும் கூறிய ட்ரம்ப், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க புதிய தடைகளுடன் ஐரோப்பாவில் சேரத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
2022 மார்ச் மாதத்திற்கு பிறகு இரு தரப்பினரும் தங்கள் முதல் நேருக்கு நேர் பேச்சுவார்த்தைக்காக கடந்த வாரம் துருக்கியில் சந்தித்த பின்னர், மொஸ்கோவிற்கும் கெய்விற்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஆதரவளித்த ட்ரம்ப்க்கு புட்டின் இந்த தொலைபேசி உரையாடலின் போது நன்றி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம், உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடனும் பேர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் பேசியுள்ளார்.
ட்ரம்புடனான நேரடி தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் “முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான” உக்ரேனின் விருப்பத்தை ஜெலென்ஸ்கி மீண்டும் இதன்போது உறுதிப்படுத்தினார்.
புட்டினுடனான ட்ரம்ப்பின் உரையாடலுக்கு முன்னதாகப் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரேன் பற்றிய எந்தவொரு முடிவும் தனது நாடு இல்லாமல் எடுக்கப்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டதாகவும், அவை உக்ரேனுக்கு “இறையான்மை விடயங்கள்” என்றும் கூறினார்.